விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தாமரைக்கனி. இவர் மாநில அளவிலான கபடி வீரர். கடந்த ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி தாமரைக்கனி வெட்டிக் கொலைசெய்யப்பட்டார்.
இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், ட்ரம்செட் அடிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலைசெய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.

பின்னர் கபடி விளையாட்டால் அப்பகுதியைச் சேர்ந்த திமுக ஒன்றியக் கவுன்சிலர் அண்ணாமலை ஈஸ்வரன் அவரது மகன் உள்பட ஆறு பேர் சேர்ந்து தாமரைக்கனியை கொலைசெய்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களை ஆறு பேரையும் காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பிணையில் வெளிவந்த அண்ணாமலை ஈஸ்வரன் உயிருக்குப் பயந்து நாகர்கோயில் பகுதியில் வசித்துவந்தார்.
இந்நிலையில், நேற்று (ஏப். 15) தமிழ்ப் புத்தாண்டு என்பதால் சேத்தூர் பகுதியில் உள்ள கரையடி விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக அண்ணாமலை வந்துள்ளார்.
அப்போது, தாமரைக்கனியின் நண்பர்கள் பழிவாங்கும் நோக்கத்தில் அண்ணாமலையை கொலைசெய்துள்ளளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராஜபாளையம் துணைக் கண்காணிப்பாளர் சங்கர் தலைமையிலான காவலர்கள் விசாரணை நடத்தினர்.

அதில் குழந்தைவேல் குமார், மதியழகன், ஜெகதீஸ்வரன் ஆகிய மூவரும் அண்ணாமலையை சரமாரியாக வெட்டிக் கொலைசெய்தது தெரியவந்தது. இதையடுத்து, காவல் துறையினர் மூவரையும் கைதுசெய்து விசாரணை செய்துவருகின்றனர்.
மேலும் இவர்களுடன் தொடர்புடைய நபர்களைத் தேடிவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தோசை கேட்டு தராததால் சப்ளையர் காதை வெட்டிய இளைஞர்கள்